பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கூவிளம்-வில்வம்
ஈகிள் மார்மிலோஸ் (Aegle marmelos,Corrn.)

‘கூவிளம்’ என்று கபிலர் (குறிஞ் 65) கூறிய சொல்லுக்கு நச்சினார்க்கினியர் ‘வில்வப்பூ’ என்று உரை கண்டார். இதுவே ‘வில்வம்’ என்று வழங்கப்படுகிறது. “யாவர்க்குமாம் இறைவர்க் கொரு பச்சிலை” என்பதற்கியைய சிவபெருமானுக்கு அருச்சனை புரிதற்கு இதன் இலைகளைச் சூட்டுவர்.

மேலும் யாப்பிலக்கணத்தில் ‘கூவிளம்’, ‘கூவிளந்தண் பூ’ என்பன ஈரசை, நான்கசைச் சீர்களுக்கு முறையே வாய்பாடாகும்.

சங்க இலக்கியப் பெயர் : கூவிளம்
பிற்கால இலக்கியப் பெயர் : வில்வம்
உலக வழக்குப் பெயர் : வில்வம்
ஆங்கிலப் பெயர் : பீல்மரம்
தாவரப் பெயர் : ஈகிள் மார்மிலோஸ்
(Aegle marmelos,Corrn.)

கூவிளம்-வில்வம் இலக்கியம்

வில்வ மரம் என வழங்கப்படும் மரத்தைச் சங்க இலக்கியம் கூவிளம் என்று கூறும்.

“உரிதுநாறு அவிழ் கொத்து உந்தூழ் கூவிளம்-குறிஞ்: 65

என்ற அடியில் உள்ள கூவிளம் என்பதற்கு நச்சினார்க்கினியர் வில்வப் பூ என்று உரை கூறியுள்ளார். நற்றிணைப் பாட்டில் (12) காணப்படும் ‘விளாம்பழம் கமழும் என்றது விளாம்பழத்தைக் குறிக்கும். அந்த ‘விளம்’ என்ற சொல்லுடன் ‘கூ’ என்ற எழுத்தைக் கூட்டிக் ‘கூவிளம்’ என்ற சொல் வில்வ மரத்தைக் குறிக்கிறது. விளமும் கூவிளமும் ஒரே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தவை.